குவந்தான், பிப் 7- இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்த கடை உதவியாளர் ஒருவர் 521,000 ரிங்கிட்டை இழந்தார். கடந்த டிசம்பர் மாதம் முகநூலில் வெளியான விளம்பரத்தில் 15 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தினால் பங்கு முதலீட்டு திட்டத்தில் இணைந்த 39 வயது நபர் தமது பணத்தை இழந்துள்ளதாக பகாங் போலீஸ் தலைவர் யஹாயா ஓத்மன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இணையத்திலுள்ள பங்கு முதலீட்டு தளத்தில் தமது பெயரை பதிவு செய்த அந்த நபர் 50,000 ரிங்கிட் செய்த முதலீட்டிற்கான ஆயிரம் ரிங்கிட்டை மீட்டுள்ளார். அதன் பிறகு தனது சேமிப்பு பணத்துடன் குடும்ப உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கடன்கள் வழி மொத்தம் 521,000 ரிங்கிட்டை கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி வரை நான்கு வங்கிக் கணக்குகளுக்கு 15 முறை பணப் பட்டுவாடா செய்துள்ளார். அதன் பின் தமக்கு கிடைக்க வேண்டிய 17 லட்சத்து, 67,258 ரிங்கிட்டை இணையம் மூலம் மீட்க தவறியதைத் தொடர்ந்து தாம் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்து அந்த நபர் பெந்தோங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக யஹாயா தெரிவித்தார்.