
மஞ்சோங், நவம்பர்-10, பேராக், சித்தியவானில் தெரு நாய்களைப் பிடித்து சுட்டுக் கொல்வதும், அவற்றை பெரியக் குழிகளில் போட்டுப் புதைப்பதும் இன்று நேற்று நடப்பதல்ல.
நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ள ஒன்று தான் என, மஞ்சோங் நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினர் Khairil Azhar Khairuddin அம்பலப்படுத்தியுள்ளார்.
நாய்களைப் பிடித்து, அவற்றுக்கு உணவோ தண்ணீரோ தராமல், சிறு சிறு கூண்டுகளில் இறுக்கப் கட்டி விடுவர்.
அதோடு மனிதர்கள் கண்ணில் படாதவாறு காட்டுப் பகுதிகளுக்குக் கூட்டிச் சென்று நாய்களைச் சுட்டுக் கொன்று குழியில் புதைத்து விடுகின்றனர்.
இது பற்றி ஏற்கனவே நகராண்மைக் கழகத்துடன் பேசியிருக்கிறேன்; ஆனால் இன்று வரை அக்கொடுமைத் தொடருவதாக New Straits Times-சிடம் அவர் சொன்னார்.
தெருநாய்கள் மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நாய்களும் பிடிக்கப்படுவது குறித்து தாம் கேள்விப்பட்டிருப்பதாக Khairil கூறினார்.
குடியிருப்புப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில், விலங்கு நல ஆர்வலர்களுடன் நகராண்மைக் கழகம் கலந்துபேசுவது கிடையாது என்றார் அவர்.
முன்னதாக சித்தியவானில் பிடிக்கப்பட்ட நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, உயிருள்ள சில குட்டிகளோடு பெரியக் குழியில் வீசப்பட்ட வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதே கடந்த மாதம் திரங்கானுவில் Kopi என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட தெரு நாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்தைப் பெற்றது.