கோலாலம்பூர். ஜன 29 – லெம்பா சுபாங் PPR மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் ஒரு குழந்தை தனது பெற்றோரின் உறவினரால் துன்புறுத்தப்பட்டு இறந்ததன் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்திருக்கிறார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதோடு அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஹுசைன் கூறினார். பிரேத பரிசோதனையின் முடிவிலும் பழைய மற்றும் புதிய காயங்களின் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
லெம்பா சுபாங் PPR வீடமைப்பு திட்டத்தில் கணவன் மற்றும் மனைவியால் துன்புறத்தப்பட்டதாக நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று சனிக்கிழமை இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பாதிக்கப்பட்ட 18 மாத குழந்தை தனது தந்தையின் உறவினரால் ஷா ஆலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு வீட்டில் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்பட்டது.
எனினும் சிகிச்சையின் போது அந்த குழந்தை இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவு மற்றும் 2001ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் கீழ் அக்குழந்தையின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஹுசைன் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.