ஈப்போ, ஜன 11 – பேரா மாநிலத்தில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கிவரும் சிம்மோர், கந்தனில் எழுந்தருளியுள்ள கல்லுமலை மகா காளியம்மன் ஆலயம் பதிவு ரத்தானது . இதன் வழி இந்த ஆலயத்தின் நிர்வாக பொறுப்பு தற்போது பேரா திவால் துறை அலுவலகத்தின் நேரடி பார்வையில் இயங்கவிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலய நிர்வாகம் பதிவு ரத்தானத்தைத் தொடர்ந்து பேரா மாநில திவால்துறை அலுவலகம் ஒரு தரப்பினரை நியமனம் செய்து வழி நடத்தப்பட்டு வந்தது .
அதன் நிர்வாகம் முறையாக செயல் படாததால் தற்போது பதிவு மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்பாக ஈப்போவில் உள்ள பேரா திவால் துறை அலுவலகத்தில் அதன் ஆலய உறுப்பினர்கள் வழி இம்மாதம் 9ஆம்தேதி வாக்களிப்பு மூலம் தியாகராஜன் கெங்கன் என்பவர் இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தியாகராஜனுக்கு இன்று பேரா திவால் துறை அலுவலகம் நியமனக் கடிதத்தை வழங்கியது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த தியாகராஜன் , தம்மீது நம்பிக்கைக் கொண்டு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் நியமனம் செய்யப்படும் புதிய நிர்வாகம் மற்றும் பொது மக்களின் ஆதரவோடு சிறப்பாக வழி நடத்தப்படும் என்றார். கந்தன் மலையடிவார மகா காளியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கமாகும்.