
சிரம்பான், மே 20 – சிரம்பான், பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் உள்ள பராமரிப்பாளரின் வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத ஆண் குழந்தை நேற்று உயிரிழந்தது.
குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக பராமரிப்பாளர் பெற்றோருக்கு முதலில் தகவல் தெரிவித்துள்ளனர் என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் Assistant Commissioner அசாஹார் அப்துல் ரஹீம் (Azahar Abdul Rahim) கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குழந்தையை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் பின்னர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவர்கள் சுவாச உதவி வழங்க முயன்ற போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததைக் கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், குழந்தை தொட்டிலில் தூங்க வைக்கப்பட்டபோது ‘பூத்திங்’ பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
உயிரிழப்பிற்கான காரணத்தை கண்டறிய குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அந்த பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு பின்னர் மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



