கோலாலம்பூர் , ஜன 18 – சிரம்பான், பண்டார் செரி செண்டாயனில் கடந்த வாரம் வங்காளதேச வர்த்தகர் ஒருவரின் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் அதிகாரி உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர். குடிநுழைவு விவகாரம் தொடர்பாக அந்த வர்த்தகர் 70,000 ரிங்கிட் கடன் பிரச்சனையை எதிர்நோக்கியிருந்ததாகவும் கூறப்பட்டது. இன்ஸ்பெக்டர் பதவியை வகித்துவரும் அந்த போலீஸ் அதிகாரி பேராக்கில் வேலை செய்துவருவதாக தெரிகிறது. கடந்த ஜனவரி 10ம் தேதி அந்த வர்த்தகரை கடத்திய இருவர் உட்பட ஆறு வங்காளதேச சந்தேகப் பேர்வழிகளுக்கு அந்த இன்ஸ்பெக்டர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டது.
தனது மூத்த சகோரரரை தொடர்புகொள்ள முடியவில்லை என கடத்தப்பட்டவரின் தம்பி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து ஒரு இடத்தில் மேற்கொண்ட சோதனையில் கடத்தப்பட்ட வர்த்தகரை போலீசார் மீட்டனர். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி வெள்ளிக்கிழமையன்று அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார். கைதான அந்த ஏழு சந்தேகப் பேர்வழிகளும் விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிரம்பான் போலீஸ் அதிகார் அரிபாய் தாராவே தெரிவித்தார்.