சிரம்பான், பிப்ரவரி 13 – இம்மாத தொடக்கத்தில், தனது பராமரிப்பில் இருந்த 11 மாத பெண் குழந்தையை கன்னத்தில் அறைந்து காயப்படுத்தியதாக, குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் பணியாளர் ஒருவருக்கு எதிராக இன்று நெகிரி செம்பிலான், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 67 வயது நோர்ஷாம் இஸ்மாயில் எனும் அப்பெண், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
இம்மாதம் ஐந்தாம் தேதி, காலை மணி 7.47-க்கும் 7.59-க்கும் இடைப்பட்ட நேரத்தில், நீலாய், டெசா செம்பாக்கா குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது அதிபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஏழாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் அப்பெண் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை மார்ச் 13-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, தனது 11 மாதக் குழந்தை துன்புறுத்தலுக்கு இலக்கானதாக 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செய்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட பராமரிப்பாளர் இம்மாதம் ஆறாம் தேதி கைதுச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.