ஈப்போ, டிச 4 – பேரா மாநிலத்தில் சிறார் சித்திரவதை சம்பவங்கள் இவ்வாண்டு குறைந்துள்ளதாகப் பேரா மாநில பெண்கள், குடும்பம், சமூக நலன், கூட்டுறவு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சல்பியா முகமட் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை சிறார் சித்திரவதை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாக இருந்தாலும், 2023இல் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை 168 சிறார் சித்திரவதை சம்பவங்களே பதிவாகியுள்ளன.
இதனிடையே, இந்த சிறார் சித்திரவதை சம்பவங்களின் அதிகரிப்புக்கு கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலக்கட்டமே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உடல் ரீதியான துன்புறுத்தல், மனோரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் குழந்தைகளை புறக்கணித்தல் ஆகியவை சிறார் சித்திரவதை பிரிவுக்குள் அடங்கும் என்று டத்தோ சல்பியா தரவுகளின் அடிப்படையில் மாநில சட்டமன்றத்தில் இத்தகவலை வெளியிட்டார்.