பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 5 – சிலாங்கூரில், ஐந்து மாவட்டங்களில், சட்டவிரோதமாக ஒழுங்கீன செயல்களை மேற்கொண்டு வந்த 16 உடம்பு பிடி நிலையங்களில் நேற்று மாலை போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
அதன் வாயிலாக, 76 அந்நிய நாட்டு பெண்களுடன் ஆடவன் ஒருவனும் கைதுச் செய்யப்பட்டான்.
குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, செர்டாங், கோம்பாக், வட மற்றும் தென் கிள்ளான் மாவட்டங்களிலுள்ள, உடம்பு பிடி நிலையங்களை, புக்கிட் அமானின், திட்டமிடப்பட்ட குற்றச் செயல் பிரிவு அதிகாரிகளும், ஒழுங்கீன, சூதாட்ட, குண்டர் கும்பல் துடைத்தொழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து சோதனையிட்டனர்.
அதன் வாயிலாக, குடிநுழைவு விதிமுறைகளை மீறி ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 வியட்நாமிய பெண்கள், 28 தாய்லாந்து பெண்கள், 23 இந்தோனேசிய பெண்களுடன் இந்தோனேசிய ஆடவன் ஒருவனும் கைதானான்.
அதே சமயம், ஏமாற்று நடவடிக்கைகள் மூலமாக சம்பந்தப்பட்ட உடம்பு பிடி நிலையங்களில், வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 37 அந்நிய பெண்கள் காப்பாற்றப்பட்டனர்.
அதே சமயம், அப்பெண்களின் முகவர்கள் என நம்பப்படும் இரு பெண்கள் உட்பட 15 உள்நாட்டவர்களும் அச்சோதனையின் போது கைதுச் செய்யப்பட்டனர்.
ஆட்கடத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.