ஷா அலாம், பிப் 5 – சிலாங்கூர், சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதுப்பள்ளி புகுவிழா வழிபாடு நேற்று பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. புத்ரா ஹைட்ஸ் என்னும் பகுதியில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் பலவித வசதிகளுடன் அமைந்துள்ள இப்புதிய கட்டடம் 2024/2025 புதிய கல்வித் தவணையில் முறையே செயல்படத் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேளையில் புதுப்பள்ளி புகுவிழா வழிபாட்டு பூஜையில் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி வாரியத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மேலும் பள்ளித் திறப்பு விழா செய்வதற்காக ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார் 1921- ஆம் ஆண்டு சீபில்டு தோட்டத்தில் செயல்படத் தொடங்கிய இப்பள்ளி தற்போது சுபாங் ஜெயா எனும் இடத்திலிருந்து புத்ரா ஹைட்ஸ் புதிய இடத்திற்கு இடமாற்றம் கண்டு அனைத்து வசதிகளுடன் செயல்படத் தொடங்கவிருக்கிறது. இப்பள்ளியில் தற்போது 85 மாணவர்கள் பயிலும் வேளையில், 10 ஆசிரியர்கள், தலைமையாசிரியை விமலா வீரப்பனின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். புதிய நவீன பள்ளி வளாகம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிச்சயம் உந்துதலாக அமையும் என நிகழ்வில் உரையாற்றிய சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குனர் மணிசேகர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.