ஷா ஆலம், டிசம்பர் 19: கோவிட்-19 நோய்த் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மற்றும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும்படி சிலாங்கூர்வாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் குறிப்பாக மூடப்பட்ட மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற சுயப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும் என மாநில அரசின் பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் முகமட் ஃபர்ஹான் ருஸ்லி கூறியுள்ளார்.
மேலும், நோய் தொற்றை தவிர்க்க குழந்தைகள் முதல் முதியோர் வரை தடுப்பூசியும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்த அவர் நோய்க்கான அறிகுறி தென்பட்டு அல்லது நோய் தொற்றுக் காணும் பட்சத்தில் ‘T.R.I.S.S.‘ எனும் பரிசோதிப்பது, தகவல் அளிப்பது, தனிமைப்படுத்திக் கொள்வது மற்றும் சிகிச்சைப் பெறுவது போன்ற நடைமுறையை அமல் செய்வதும் கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் பள்ளி விடுமுறையாகவும் உள்ளதால் திருமணம், ஒன்றுகூடும் நிகழ்வுகள் அதிகம் நடைபெறுவதோடு பொழுது போக்கு மையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நடப்புக் சூழலைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றனர்.