ஈப்போ, பிப் 25 – நேற்று பேராக் சுங்காய் மண்டபத்தில் நடைபெற்ற முவாலிம் பத்தாங் பாடாங் மாவட்ட நிலையிலான ஒற்றுமை பொங்கல் நிகழ்வில் செங்காய் , கோலா பீக்கம் கிராம மக்கள் 41 பேருக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.
செங்காய் கிராமத்தில் 28 இந்தியர்களுக்கும், 2 சீனர்களுக்கும், ஒரு மலாய்க்காரருக்கு நிலப்பட்டா வழங்கப்பட்ட வேளையில் பீடோர் கோல பீக்கம் கிராமத்தில் 10 சீனர்களுக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இதுவரை பேராக் மாநிலத்தில் பல ஆண்டுகளாக நிலப்பட்டா கிடைக்காமல் போராடி வந்த 300 பேருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டதாக பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
இன்னும் நிலப்பட்டா கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் பாகான் டத்தோ, சுங்கை தீமா கிராமத்தைச் சேர்ந்த 44 இந்தியக் குடும்பங்களுக்கு எதிர்வரும் தீபாவளித் திருநாளுக்கு முன்னதாக நிலப்பட்டா கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
இனிவரும் காலங்களில் ஆர்.பி.டி எனப்படும் உள்ளூர் வீட்டுமனைத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைக்கான நிலங்கள் ஒதுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய நிலப் பகுதிகளில் நீர் மற்றும் மின்சார வசதிகள் கிடைப்பதற்கான சூழல்கள் இல்லாமல் இருப்பதால் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே காலை மணி 8:30 அளவில் தொடங்கிய பொங்கல் விழாவில் மூவினங்களையும் சேர்ந்த மகளிர் பொங்கல் வைக்கும் போட்டிகளில் கலந்து கொண்டனர். கோலம் வரைதல், வர்ணம் தீட்டும் போட்டிகளுடன் பல கலாச்சார நடவடிக்கைகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.