பெட்டாலிங் ஜெயா, டிச 5 – அண்மையில் பினாங்கில் நடந்த செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் பாடக் கூடாது என உத்தரவுப் போட்ட கல்வித்துறை அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செனட்டர் லிங்கேஸ்வரன் மேலவையில் கோரிக்கை விடுத்தார்.
மக்களைவையில் கல்வி அமைச்சர் அது சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்ட அதிகாரி ஒரு பலிகடா என்றும் அவருக்கு உத்தரவு கொடுத்த மேலதிகாரி மீதுதான் நடவடிக்கை எடுப்பது அவசியம் என லிங்கேஸ்வரன் அறிவுறுத்தினார்.
செந்தமிழ் விழா தொடர்பில் நவம்பர் 6ஆம் திகதி இயங்கலை சந்திப்பில் ஒரு ஆண் அதிகாரி பிரார்த்தனை மட்டும் செய்ய வேண்டும் எனவும் மற்றதற்கு அனுமதி இல்லை எனவும் உத்தரவு போட்டதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சு உண்மையான குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் லிங்கேஸ்வரன் கூறினார்.