கோலாலம்பூர், டிச 5 – கடந்த வாரம் செராஸ், பண்டார் துன் ரசாக் அடுக்கு மாடி குடியிருப்பில் 6 வயது சிறுமி மரணமடைந்த சம்பவத்தில், அச்சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என போலிஸ் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தன்று, அச்சிறுமி மதியம் 2.30 மணியளவில் சுயநினைவற்ற நிலையில் வீட்டில் அவரது தந்தையால் கண்டெடுக்கப்பட்டுள்ளார். உடனே மதியம் 3.40 மணிக்குள் அச்சிறுமி துவாங்கு அஸீசா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும், அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நாள் அன்று, காலை 11.30 மணியளவில் அச்சிறுமி உறங்கிக் கொண்டிருக்க, அவரது தந்தை உணவு வாங்க வெளியே சென்றுள்ளார் என்றும், வீடு திரும்பியபோது அச்சிறுமி சுயநினைவற்ற நிலையில் இருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் போலிசார் தகவல் அறிந்துள்ளனர்.
சவப்பரிசோதனை முடிவில், அச்சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதோடு அச்சிறுமி சரிவர கவனிக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனவும் போலிஸ் அறிந்துள்ளனர்.
தந்தையிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமி யாரால் கொடுமைபடுத்தப்பட்டிருக்கலாம் என்பது பற்றி தற்போது போலிஸ் தீர விசாரித்து வருகிறது.