செர்டாங், ஜனவரி 17 – பெண் ஒருவரை கொள்ளையடித்த பின், அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிய பாகிஸ்தான் ஆடவன் ஒருவன், CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக பிடிபட்டான்.
ஸ்ரீ கெம்பாங்ஙானிலுள்ள, தாமான் செர்டாங் பெர்டானா ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அவன் கைதுச் செய்யப்பட்டான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மணி 12.40 வாக்கில், புத்ராஜெயாவிலுள்ள, பேரங்காடி ஒன்றில் வேலை செய்யும் 29 வயது பெண் ஒருவர், செர்டாங் KTM மேம்பாலத்தில் நடந்து சென்ற போது, அவரை அவ்வாடவன் அணுகியதாக, செர்டாங் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் எ.எ. அன்பழகன் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது வேலை முடிந்து சுங்கை பெசியிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அப்பெண்ணின் கைப்பேசியை அவன் கொள்ளையிட்டதோடு, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்ததாக கூறப்படுகிறது.
அதனால், மன அழுத்தத்திற்கு இலக்கான அப்பெண், நேற்றிரவு மணி 8.30 வாக்கில் செய்த போலீஸ் புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட, 23 வயதான அந்த பாகிஸ்தான் ஆடவன் கைதானான்.
அவனுடன், கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் சக நாட்டை சேர்ந்த 29 வயதான மற்றொரு ஆடவனும் கைதுச் செய்யப்பட்டதை அன்பழகன் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆறு மாதங்களாக நாட்டில் தங்கி இருக்கும் அவ்விருவரும் விசாரணைக்காக நேற்று தொடங்கி இம்மாதம் 22-ஆம் தேதி வரையில் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வேளை ; குற்றவியல் சட்டம் மற்றும் குடிநுழைவுச் சட்டங்களுக்கு கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.