ஈப்போ, ஜன 8 – பேராக் செலாமாவில் புசாட் பெங்காஜியன் இஸ்லாம் நூர் அஸ் -சலாமில் தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் ஒரு சிசுவை அட்டைப் பெட்டியில் போட்டு கைவிட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் மற்றும் 14 வயது சிறுமியையும் போலீசார் கைது செய்தனர். சனிக்கிழமை காலை மணி 7. 28 அளவில் அந்த குழந்தை கண்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரிடமிருந்து போலீஸ் புகார் பெற்றதாக செலாமா போலீஸ் தலைவர் சுப்ரிட்டெண்டன்ட் சாருடின் சமா கூறினார்.
அந்த குழந்தையை புகார் தாரர் செலாமா மருத்துவமனையில் சேர்த்த பின்னர் அவர் புகார் செய்தார். போலீஸ் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து நேற்று அந்த இரு சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டனர். அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட அவ்விருவரும் பள்ளி மாணவர்கள் என சாருடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.