கோலாலம்பூர், ஜன 12 – 5 ஆண்டுகளுக்கு முன் புத்ரா ஜெயாவிலுள்ள ஒரு வீட்டில் தனது 23 மாத ஆண் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக நோர் ஆயிஷா முகமட் யூனுஸ் மற்றும் அவரது வீட்டில் குடியிருந்த நூர் ஆயிஷா இப்ராஹிம் ஆகிய இருவருக்கும் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அக்குழந்தையின் தாயான 40 வயதுடைய நோர் ஆயிஷா முகமட் யூனுஸ்சிற்கும் , 37 வயதுடைய நூர் ஆயிஷா இப்ராஹிம் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி டத்தோ முஹம்மட் ஜமீல் ஹுசின் தீர்ப்பளித்தார். 2019 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து தண்டனையை அனுபவிக்கும்படி அந்த இரண்டு பெண்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் அதே ஆண்டு நவம்பர் 4ஆம் தேதிக்குமிடையே புத்ரா ஜெயா ப்ரெசின்ட்டிலுள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். அந்த குழந்தை சித்ரவதைக்கு உள்ளானதோடு அதன் முகவாய்க்கட்டை , கைகள் மற்றும் கால்களிலும் காயங்கள் காணப்பட்டது. அக்குழந்தையின் தலையில் தாக்கப்பட்டதால் அதன் மூளையில் இரத்தக் கசிவு மற்றும் உடலில் 89 இடங்களில் வீக்கம் இருந்ததோடு தீக்காயங்கள் இருந்ததாகவும் மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்தது.