ஜகார்த்தா, மார்ச் 25 – இந்தோனேசியா, ஜாகார்த்தாவில், உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை ஏற்றி செல்ல சொன்னதால், இ-ஹெய்லிங் வாடகை கார் ஓட்டுனர் ஒருவர் திகில் மற்றும் பதற்றமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்ததாக கூறப்படுகிறது.
அதுவும், அந்த சடலத்தை காரின் முன் இருக்கையில், ஓட்டுனருக்கு அருகில் அமர வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சடலம் விரைத்துப் போயிருப்பதால், அதனை முன் இருக்கையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக, சம்பந்தப்பட்ட இ-ஹெய்லிங் ஓட்டுனர் தனது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“சரியாக நள்ளிரவு மணி 12-க்கு அது போல ஒரு சவாரி கிடைத்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, வாடிகையாளருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் “ஸ்கிரீன் ஷாட்டையும்” அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
தனது இருப்பிடத்திற்கு ஆம்புலன்ஸ் எதுவும் செல்லாது என்பதால், இ-ஹெய்லிங் சேவையை நாடுவதாக, அந்த செய்தியில், வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதை காண முடிகிறது.
எனினும், அச்சம்பவம் எங்கு நிகழ்ந்தது, இறுதியில் இ-ஹெய்லிங் ஓட்டுனர் அந்த சவாரியை ஒப்புக் கொண்டாரா? என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.