ஜோகூர் பாரு, ஜன 7 – எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி நாட்டின் 17வது பேரரசராக அதிகாரப்பூர்வமாக பதிவியேற்கும் வரை யாரையும் சந்திக்க அனுமதி வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளார் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம்.
அதுவரை, ஏற்கனவே சந்திக்க ஒப்புதல் வழங்கியிருந்தவர்கள், ஜோகூர் மந்திரி பெசார் மற்றும் மாநில அரசாங்க அதிகாரிகளை மட்டுமே தாம் சந்திக்கப்போவதாகவும், இதற்கு மேல் சந்திக்க அனுமதி கேட்பவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சுல்தான் கூறியுள்ளார். இந்த மகத்தான பொறுப்பை ஏற்பதற்கு முன், இக்காலக்கட்டத்தில் தாம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட இருப்பதாக நேற்று சுல்தான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்பதாக, பெரிக்காதான் நேஷனலை ஆதரிக்கும் 118 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு பேரரசர் அனுமதி வழங்கியுள்ளதாக வெளியான செய்தி பரவலாக பகிரப்பட்ட வேளையில் அது பொய்ச் செய்தி என எதிர்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் கூறியிருந்தார்.
பிரதமர் அன்வாருக்கு எதிராக 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாண வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு பேரரசரிடம் சமர்ப்பித்துள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு இணைய பதிவேட்டாளர் ராஜா பெட்ரா கமாருடின் வீடியோ வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.