ஜெம்போல், நவம்பர் 29 – நெகிரி செம்பிலான், ஜெம்போல் ஏரியின் அடிமட்டத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், மர்மமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை, ஏரியில் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியாததே அதற்கு காரணம் ஆகும்.
ஏரியில் விழுந்து காணாமல் போன, மோட்டார் சைக்கிளோட்டியை, முக்குளிப்பு நடவடிக்கை வாயிலாக தேடும் பணிகளை, இன்று காலை மணி ஏழு வாக்கில் தீயணைப்பு வீரர்கள் தொடங்கினர்.
முன்னதாக, அதிகாலை மணி 6.30 வாக்கில், மோட்டார் சைக்கிள் ஏரியில் விழுந்த சம்பவம் தொடர்பில், நபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக, ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹோ சாங் ஹொக் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, ஏரியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில், அடிமட்டத்தில் மூழ்கிக் கிடந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது.
எனினும், அதனை ஒட்டிய நபரை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஹோ தெரிவித்தார்.
அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண், தொலைந்து போன மோட்டார் சைக்கிள் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கவில்லை என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனால், அதன் உண்மையான உரிமையாளரை அடையாளம் காணும் நடவடிக்கையை போலீசார் தொடங்கியுள்ளனர்.