பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 13 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கபட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யான் கொலை தொடர்பில், விசாரணைக்கு உதவக்கூடிய சில பொருட்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
நேற்றிரவு, டமான்சாரா டாமாய், இடமான் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, R புளோக்கில், இரண்டாவது முறையாக வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனையின் போது, அந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
எனினும், அந்த கண்டுபிடிப்புகள் அனைத்தையும் முதலில் பகுப்பாய்வு செய்து, போதிய ஆதாரங்களை திரட்ட வேண்டி உள்ளதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.
ஜெய்னை கொன்றவரை கண்டுபிடிக்கும் முயற்சியில், இதுவரை சாதகமான முன்னேற்றம் எதுவும் தென்படவில்லை.
இதனிடையே, சோதனையின் போது குடியிருப்பாளர்கள், தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதா என வினவப்பட்ட போது, குடியிருப்பாளர்கள் வழக்கம் போல தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபடலாம்.
சோதனையின் போது வீட்டில் யாரும் இல்லை என்றால், போலீசார் காத்திருந்து பின்னர் சம்பந்தப்பட்டவர்களை மரபணு சோதனைக்கு அழைப்பார்கள் என ஹுசைன் சொன்னார்.
முன்னதாக, நேற்றிரவு மணி 8.30 தொடங்கி, R புளோக்கிலுள்ள, ஒவ்வொரு வீட்டிலும் சுமார் இரண்டு மணி நேரம் சோதனையிட்ட போலீஸ் தடயவியல் குழு, இரவு மணி 10.30 வாக்கில், இரண்டு அட்டை பெட்டிகளுடன் அங்கிருந்து வெளியேறி சென்றது குறிப்பிடத்தக்கது.