கோலாலம்பூர், நவ 23 – பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது அப்போதைய தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் கீழ் செயல்பட்ட சமூகத் தொடர்புத் துறை அல்லது ஜே-கோம் (J-KOM), பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
2021, மே 19 ஆம் தேதி, பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் பதவி வகித்த போது ஜே-கோமை பிரதமர் துறையின் கீழ் வைக்க அமைச்சரவை முடிவெடுத்ததாக, தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
“அக்காலகட்டத்தில் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சராக டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா இருந்தார். ஆகவே அவர்கள் இருவரிடமும் விளக்கம் கேட்பது சிறப்பானது என நான் கருதுகிறேன்,” என்று மக்களவையில் தியோ தெரிவித்தார்.
முன்னதாக, தாசெக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் ஜே-கோமை, தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சின் கீழ் வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
பிரதமர் துறையின் கீழ் ஜே-கோம் மாற்றப்பட்டப் பிறகு, பொது மக்களுக்கு வழங்க வேண்டிய விழிப்புணர்வு குறைவான செயல்திறனைக் கொண்டு செயல்பட்டதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.