ஜொகூர் பாரு, டிசம்பர் 5 – ஜொகூரில், போலி கடப்பிதழை தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.
47 வயதான உள்நாட்டு பெண் ஒருவர் கைதுச் செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்கும்பலின் நடவடிக்கைகள் அம்பலமானதாக, ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் பஹாருடின் தாயிர் தெரிவித்தார்.
அக்கும்பலின் முக்கிய நபராக அப்பெண் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு வாரமாக குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட உளவு நடவடிக்கை வாயிலாக அப்பெண் பிடிபட்டார்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போலி கடப்பிதழ் மோசடியில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படும் அந்த பெண்ணிடமிருந்து, ஐந்து சீன கடப்பிதழ்களும், 12 ஆயிரத்து 100 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே சமயம், அக்கும்பலின் “புரோகராக” செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் 34 வயது சீன நாட்டு ஆடவன் ஒருவனும் கைதாகியுள்ளான்.
ஒரு கடப்பிதழை தயாரித்து கொடுக்க அவர்கள், 500 ரிங்கிட்டை கட்டணமாக விதித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
கைதுச் செய்யப்பட்டவர்கள், குடிநுழைவுத் துறை சட்டம் மற்றும் 1966-ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டங்களுக்கு கீழ் விசாரிக்கப்படுவார்கள்.