ஜொகூர் பாரு, டிசம்பர் 6 – ஜொகூர் பாரு, சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்திலுள்ள, CIQ – சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் வளாகத்தில், 12 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை நீடித்ததால், அங்கு போக்குவரத்து நிலைகுத்தியது.
நேற்றிரவு மணி எட்டுக்கு ஏற்பட்ட மின் தடை இன்று காலை மணி பத்து வரை நீடித்தது.
அதனால், இன்று காலை CIQ வளாகம் இருள் சூழ்ந்து, மிகவும் வெப்பமான சூழலில் காணப்பட்டது.
மின் தடையால் தானியங்கி முறைகள் செயல்படாமல் போனதால், இன்று காலை அங்கு மோசமான நெரிசல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால், 20 நிமிடங்களில் முடிய வேண்டிய கடப்பிதழை முத்திரையிடும் நடவடிக்கைக்காக, சிலர் மூன்று மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்ததால், வேலைக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மின்தூக்கி, மின்படிக்கட்டு உட்பட தானியங்கி முறையில் செயல்படும் கடப்பிதழை முத்திரையிடும் இயந்திரம் ஆகியவை செயல்படவில்லை.
இவ்வேளையில், மலேசியா – சிங்கப்பூர் போர்டர் குரோசர்ஸ் சமூக ஊடகத்தில், அவ்விவகாரம் குறித்து பலர் பதற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“CIQ வளாகத்தில் மின் தடை, கடப்பிதழ் கைமுறையில் முத்திரையிடப்படுகிறது” என முருக வேல் என்பவர் பதிவிட்டுள்ள வேளை ;
“தானியங்கி “MBIKE” முகப்பும் செயல்படவில்லை” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில், சுல்தான் இஸ்கண்டார் CIQ வளாக நிர்வாகத்தின் இன்னும் கருத்துரைக்கவில்லை.