கோலாலம்பூர், ஜனவரி 31 – இடிந்து விழுந்த தனது வீட்டின் முன் “கேட்” சுவர், குப்பைகளால் நிரம்பியிருந்ததைக் கண்ட உரிமையாளர் ஒருவர், தனது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
இடிந்து விழுந்த வீட்டின் முன் கேட் மதில் சுவரில், சிமெண்ட் அல்லது செங்கற்களுக்கு பதிலாக, குப்பைப் பைகளும், உடைந்த ஓடுகளும் நிரப்பப்பட்டிருக்கும் காட்சிகளை, @sidchan எனும் X சமூக ஊடக கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிமெண்டு அடுக்கு மிகவும் மெல்லியதாக இருப்பதால், அந்த சுவர் இடிந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.
“மலேசியா முழுவதும் உள்ள அனைத்து மேம்பாட்டாளர்களுக்கும்,நீங்கள் இலாபத்தை அதிகரிக்க விரும்பினால், தயவு செய்து இதுபோன்ற நடைமுறைகளை தவுர்க்கவும்” என அந்த பதிவின் கீழ் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“இது வீட்டை வாங்குபவருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இடிந்து விழுந்த சுவரால் வீட்டின் உரிமையாளர் காயம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சம்பவம், ஜோகூர், குளுவாங், தாமான் புத்ரிமாஸ் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்தது எனவும் அந்த பதிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இவ்வேளையில், அதுபோன்ற சூழலை எதிர்நோக்கினால், உரிமையாளர் யாரிடம் முறையிட வேண்டும் எனவும், இழப்பீடு கோரலாம் எனவும், அந்த பதிவின் கீழ் இணையப் பயனர்கள் சிலர் பதிவிட்டுள்ள வேளை ;
தாமான் புத்ரிமாஸ் ஒரு புதிய வீடமைப்புப் பகுதி, அங்கு வீடுகளை வாங்கிய பலருக்கு தாம் கடனுதவியை ஏற்பாடு செய்து தந்திருப்பதாக பதிவிட்டுள்ள நபர் ஒருவர், அவர்களுக்காக தாம் வருந்துவதாக கூறியுள்ளார்.