ஜோகூர் பாரு, ஜனவரி 4 – இரு சகோதரர்களுக்கு எதிராக, ஜோகூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், 21 வயது பி.வசந்தராஜ் மற்றும் 20 வயது பி.ஜக்தீஷ்ராஜ் ஆகிய அந்த இருவரிடமிருந்தும் இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி, பின்னிரவு மணி 1.08 வாக்கில், ஜோகூர் பாரு, ஜாலான் ட்ரஸ் – ஜாலான் உங்கு புவான் சாலையில், 25 வயது முஹமட் சாபிக் அப்துல் லத்திப் எனும் நபரை கொலை செய்ததாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்னும் கைதுச் செய்யப்படாமல் இருக்கும் இதர மூவருடன் இணைந்து அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 12 பிரம்படிகளுடன் கூடிய 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு விசாரணை மார்ச் ஆறாம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, கூரிய ஆயுதங்களை உட்படுத்திய சண்டையின் போது, வெட்டுக்காயங்களுக்குஇலக்காகி உள்நாட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.