ஜோகூர் பாரு , டிச 22 – ஜோகூரில் சீன தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 7 வயது மாணவனை கடத்தும் முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் பதின்ம வயதைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். 15, 17 மற்றும் 18 வயதுடைய அவர்கள் பொந்தியானில் நேற்று முன் தினம் மாலை மணி 5.40 அளவில் கைது செய்யப்பட்டதாக தென் ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் ரவுப் செலாமாட் தெரிவித்திருக்கிறார். அந்த மூவரும் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் நூர் ஃபாத்தின் ஃபாரிட் முன்னிலையில் அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டிசம்பர் 12 ஆம் தேதி அந்த மாணவனின் தந்தையின் நண்பரும் அவரது வர்த்தக பங்குதாரருமான 41 வயதுடைய நபரை போலீசார் கைது செய்தனர்.
அந்த சிறுவனை கடத்தும் முயற்சியை சிங்கப்பூரைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்புவாசி ஒருவர் தடுத்ததாகவும் அந்த சம்பவத்தின்போது அவர் கடுமையாக காயம் அடைந்ததோடு பல பற்களையும் இழந்ததாக கூறப்பட்டது. இந்த கடத்தல் முயற்சியில் சம்பந்தப்பட்ட முக்கிய சந்தேகப் பேர்வழியான மெக்கனிக் ஒருவருக்கு எதிராக செவ்வாய்கிழமையன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் குற்றவியல் சட்டத்தின் 363 ஆவது விதியின் கீழ் கடத்தல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது