
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-மானிய விலையிலான RON95 பெட்ரோலை சட்டவிரோதமாக நிரப்ப முயன்ற சிங்கப்பூர் ஓட்டுநர் ஒருவர் ஜோகூரில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
RON95 பெட்ரோலை வாங்க வெளிநாட்டு வாகனங்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தடை அமுல்படுத்தப்பட்ட பிறகு ஜோகூரில் கைதுச் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு ஓட்டுநர் இவராவார்.
ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது Honda Civic காரில் எரிபொருள் நிரப்பியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
சம்பந்தப்பட்ட கார் மற்றும் CCTV காட்சிகள் ஆதாரமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் ஜோகூர் கிளை கூறியது.
இதற்கு முன் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஓட்டுநர்களும் நேரடியாகக் கைதுச் செய்யப்படுகின்றனர்.



