ஜோகூர் பாரு, பிப் 9 – கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் தேசிய முன்னணி தலைமையிலான ஜோகூர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழுவில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியான போதிலும் புதிய ஆட்சிக்குழு மாற்றத்தில் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது. மெந்தரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஸி சுற்றுலா தொழில்துறைக்கான ஆட்சிக் குழு பொறுப்பையும் ஏற்பார் என கூறப்படுகிறது.
ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள 10 பேரில் அறுவரின் துறைகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் இதர நால்வர் எந்தவொரு மாற்றமும் இன்றி அவர்களுக்கு வழங்கப்பட்ட துறையில் தொடர்ந்து இருந்துவருவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்களில் எவரும் நீக்கப்படமாட்டார்கள். துறைகள் மட்டுமே மாற்றப்படும் என்பதால் மாநிலத்தின் ஒற்றுமை அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்ற ஆருடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.