ஜோகூர் சட்டமன்றத்தில் நியமன உறுப்பினர்கள் முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது: ஙா கோர் மிங் சாடல்

கோலாலாம்பூர், மே-10,
ஜோகூர் சட்டமன்றத்தில் நியமன உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான மாநில அரசின் முடிவு, அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என, DAP தேசியத் துணைத் தலைவர் ஙா கோர் மிங் சாடியுள்ளார்.
ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும், இத்தகைய நியமன முறை வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்தார்.
கொல்லைப்புற வழியாக சட்டமன்றத்திற்குள் நுழைந்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்குண்டான ஊதியம் மற்றும் சலுகைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது என, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சருமான ஙா கோர் மிங் சொன்னார்.
எனவே, இம்முடிவை, பாரிசான் நேஷனல் தலைமையிலான மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஜோகூர் மக்களிடம் பக்காத்தான் ஹராப்பான் (PH) கையெழுத்து வேட்டையைத் தொடங்கும் என்றும் அவர் சொன்னார்
PH உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஜோகூர் சட்டமன்றத்தில் 5 நியமன உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா கடந்த வியாழக்கிழமை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 61-ராக உயர்ந்துள்ளது.
சபா, திரங்கானு மற்றும் பஹாங் மாநிலங்களைத் தொடர்ந்து, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களைச் சட்டமன்றத்தில் நியமிக்கும் நாட்டின் நான்காவது மாநிலமாக ஜோகூர் உருவெடுத்துள்ளது.



