![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-02-Jul-2024-07-30-PM-7502.jpg)
ஜொகூர் பாரு, ஜூலை-2, ஜூன் 26-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து ஜொகூர் பாருவுக்கு விரைவுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர், சுமார் 10 நிமிடங்களுக்குப் பேருந்தில் லக்கேஜ் பெட்டிகளை வைக்கும் இடத்தில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறலுக்கு ஆளான சம்பவம் வைரலாகியுள்ளது.
20 வயது அப்பெண், கோலாலம்பூரில் இருந்து நண்பகல் 12.45 மணிக்குக் கிளம்பிய SC Southern Express நிறுவனத்திற்குச் சொந்தமான விரைவுப் பேருந்தில் ஜொகூர் பாருவுக்கு தனியாகப் பயணம் செய்தார்.
பலத்த மழைக்கு மத்தியில் மாலையில் ஜொகூர் பாருவை அடைந்த போது, தனது சூட்கேஸ், அந்த லக்கேஜ் பெட்டி வைக்குமிடத்தில் சற்று சரிந்திருப்பதைக் கவனித்த அப்பெண், அதனை எடுக்க உள்ளே ஊர்ந்துச் சென்றார்.
ஆனால், அவரின் துரதிஷ்டம்…. லக்கேட் பெட்டியின் கதவு மூடிக் கொண்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சத்தமாக கதவைத் தட்டிப் பார்த்தும் யாருக்கும் கேட்கவில்லை.
இதனால் பயத்தில் நடுங்கியவர், பெட்டிகளுக்கு மத்தியில் தான் சிக்கிக் கொண்டிருப்பதை படம் பிடித்து whatsapp வாயிலாக சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் பணியாளருக்கு அனுப்பி வைத்தார்.
நேரமாக ஆக, அவருக்கு மூச்சுத் திணறிய நிலையில், 10 நிமிடங்கள் கழித்து பேருந்து நிறுத்தப்பட்டு அவர் மீட்கப்பட்டார்.
“பேருந்து ஓட்டுநர் என்னிடம் மன்னிப்புக் கூட கேட்கவில்லை; சிரிப்பு மட்டுமே அவரின் பதிலாக இருந்தது. ஆனால், அந்த 10 நிமிடங்கள் எனது வாழ்நாளின் மிகவும் திகிலான அனுபவம்” என அப்பெண் கூறினார்.
அச்சம்பவத்திற்கு பேருந்து நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, அதனை தங்களிடம் இருந்து மூடி மறைத்து விட்ட ஓட்டுநருக்கும் பணியாளர்களும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தது.