பெட்டாலிங் ஜெயா, பிப் 13 – வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மின் அஞ்சலை ஜோகூர் போலிசும் பெற்றிருப்பதை ஜோகூர் போலீஸ் தலைவர் M. குமார் உறுதிபடுத்தியுள்ளார்.
இதற்கு முன் இதே போன்ற மிரட்டல்களை சில ஜோகூர் அரசாங்க துறைகள் பெற்றிருப்பதாகவும் இப்போது ஜோகூர் போலிஸ் துறைக்குக்கும் அந்த மிரட்டல் மின் அஞ்சல் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.
தமது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அந்த மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெடிகுண்டு புரளிகள் விடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
ஒரே நபரிடமிருந்து இந்த மிரட்டல் வந்திருப்பதாகவும், இந்த மிரட்டலுக்கு போலியான மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பான மேல் விவரங்களை விவரிக்கவில்லை.
இதற்கு முன்னரும் வெடிகுண்டு மிரட்டலும் இதே மின் அஞ்சல் முகவரியிலிருந்துதான் வந்துள்ளது. அந்த மின் அஞ்சலை அனுப்பியவரின் அடையாளத்தை கண்டறிய நாங்கள் முயற்சித்து வருகிறோம். இது தொடர்பான மேம்பாடுகளையும் ஊடகங்களுக்கு நாங்கள் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஜோகூர் பாரு மாநகர் மன்ற கோபுரம் உட்பட மூன்று அரசாங்க நிறுவனங்கள் ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து நேற்று வெடிகுண்டு மிரட்டலை பெற்றதாக தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் ரவுப் செலாமாட்டும் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜோகூர் பாரு மாநகர் மன்ற கோபுரத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு அனைத்து 22 மாடிகளிலும் போலீசார் வெடிகுண்டு தேடும் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும் அங்கு சந்தேகத்திற்குரிய எந்தவொரு வெடிகுண்டும் கண்டுப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.