ஜோகூர் பாரு, ஜன 12 -ஞாயிற்றுக்கிழமை வரை ஜோகூரில் அடைமழை பெய்யும் என அம்மாநில மந்திரிபெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஸி எச்சரித்திருக்கிறார். எனவே பொதுமக்கள் குறிப்பாக ஆற்றோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அவர் எச்சரித்திருக்கிறார். மலேசிய வானிலைத்துறையும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருப்பதை ஒன் ஹபீஸ் காஸி சுட்டிக்காட்டினார். சிகமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கியில் கடுமையாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தங்காக், பத்து பஹாட், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாருவிலும் ஞாயிற்றுக்கிழமைவரை மழை பெய்யும் என்பதோடு ஜனவரி 14 மற்றும் ஜனவரி 15ஆம் தேதி ஜோகூர் பாருவில் கடல் பெருக்கு மிகவும் மோசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.