
டெங்கில், ஆகஸ்ட்-28,சிலாங்கூர், டெங்கில் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து (Puspen) தப்பியோடிய இருவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை சுமார் 8.40 மணியளவில் அந்த மையத்திலிருந்து தப்பிய அவ்விரு நபர்களும், அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து காரைத் திருடி தப்பிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட அந்தக் கார் பின்னர் பெரானாங் (Beranang) பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் AADK எனப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவன அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
தப்பியோடிய நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக செப்பாங் போலீஸ் துணைத் தலைவர் Mior Mohd Nor Azuan Alias தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து விரிவான உள்விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக AADK தலைமை இயக்குநர் டத்தோ Ruslin Jusoh தெரிவித்துள்ளார்.
இதில் ஏதேனும் அலட்சியமோ அல்லது SOP விதிமுறை மீறலோ கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.



