![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-29-May-2024-08-56-AM-9459.jpg)
வாரணாசி, உத்தரபிரதேசம், மே-29, இந்தியா, புது டெல்லி விமான நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு நேற்று காலை 5.30 மணிக்குப் புறப்படவிருந்த IndiGo விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புறப்பட தயாராக இருந்த நேரத்தில், கழிப்பறையில் கைத் துடைக்கப் பயன்படும் tissue காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் இருந்தது கண்டு விமானப் பணியாளர்கள் பதறிப்போயினர்.
அரைமணி நேரத்தில் குண்டு வெடிக்கும் என அதில் எழுதப்பட்டிருந்ததால், விமான நிலையக் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து 176 பயணிகளும் அவசர கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
உயிர் பயத்தில் சில பயணிகள் வேகமாக குதித்து ஓடிய வேளை, இன்னும் சிலர் விமான இறக்கையில் நடந்து வந்து கீழே குதித்த பரபரப்பான காட்சிகள் வைரலாகியுள்ளன.
அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதும் விமானம் தனி இடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களால் முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அச்சோதனையில் வெடிப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து காகிதத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என உறுதிச் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும், காலை 11:00 மணிக்கு மாற்று விமானம் மூலமாக வாரணாசிக்குப் புறப்பட்டதாக IndiGo விமான நிறுவனம் தெரிவித்தது.