பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 29 – சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, டேசா மெந்தாரி அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுக்கு அருகில், உடலில் காயத்துடன் இறந்து கிடந்த இந்தோனேசிய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மணி 6.30 வாக்கில், அச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததை, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் பாக்ருடின் அப்துல் ஹமிட் உறுதிப்படுத்தினார்.
உடனடியாக, சம்பவ இடத்தை சென்றடைந்த போலீசார், ஐந்தாவது புளோக்கின் படிக்கட்டுக்கு அருகில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை மீட்டனர்.
அப்பெண் எதனால் உயிரிழந்தார் என்பதை அடையாளம் காண, தடயவியல் துறையின் அறிக்கைகாக காத்திருப்பதாக பாக்ருடின் தெரிவித்தார்.
அதோடு, கொலையாளியை கண்டுபிடிக்க, சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவும் ஆராயப்படும் என்றாரவர்.
அச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள், முன்வந்து போலீசாரின் விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.