வாஷிங்டன், ஜன 28- 2019 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்தபோது, கட்டுரையாளர் இ.ஜீன் கரோல் என்பவருக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக டொனால்ட் டிரம்ப் $83.3 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்று நியூயார்க் ஜூரி மன்றம் முடிவு செய்துள்ளது. சிவில் விசாரணையில் இழப்பீட்டு சேதங்களுக்கு $18.3 மில்லியன் டாலரும் மற்றும் தண்டனைக்குரிய இழப்பீடாக $65 மில்லியன் வழங்க வேண்டுமென டொனால்ட் டிரம்ப்மிற்கு உத்தரவிடப்பட்டது. 1990 களில் கரோலை அவதூறு செய்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதற்கு முந்தைய சிவில் வழக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதகாக டொனால்ட் டிரம்ப் உறுதி பூண்டுள்ளார். இந்த தீர்ப்பு முற்றிலும் அபத்தமானது என்றும் அவர் வருணித்தார். அண்மைய விசாரணையில், கரோலுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை நடுவர் குழு மட்டுமே தீர்மானிக்க வேண்டும். கரோலுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையானது, அவரது கருத்துகள் அவரது நற்பெயர் மற்றும் நல்வாழ்வுக்கு ஏற்படுத்திய பாதிப்பிற்காக என ஜூரிகள் மன்றம் மன்றம் கண்டறிந்துள்ளது. காரோலுக்கு எதிராக தொடர்ந்து பேசுவதைத் தடுக்கும் நோக்கில் ஜூரி குழுவினர் தண்டனைக்குரிய இழப்பீட்டையும் வழங்கியுள்ளனர்.
ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய ஜூரர்கள் குழு தீர்ப்புக்கு வருவதற்கு மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை எடுத்துக் கொண்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் டிரம்ப் மொத்தம் 91 குற்றச் செயல்களுக்கு நான்கு கிரிமினல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் குற்றம் சாட்டப்பட்ட முதல் அதிபர் இவர்தான். ஆனால் தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்து வருகிறார்.