கோலாலம்பூர், ஏப்ரல் 24 – மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் டோல் சாவடி வழியாக வேகமாகச் சென்று, தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்த சம்பவம் சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பொறுப்பற்ற முறையில் அந்த இருசக்கர வாகனம், கார் பாதையைப் பயன்படுத்தி வரிசையைக் கடந்து வேகமாகச் செல்ல முயற்சிப்பதையும், வேகமாக நெருங்கி வரும்போது, டோல் சாவடியின் தடை மூடவே, அது அவரை நேருக்கு நேர் தாக்கி, வாகனத்துடன் கவிழ்த்ததும்,டாஷ் கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
பிறகு, அந்த ஓட்டுநர் சாலையோரம் புல்வெளியில் பரந்து விழுந்த தனது மோட்டார் சைக்கிளை நோக்கி எழுந்து நின்று செல்வதை அந்தக் காணொளியில் காணமுடிகின்றது.
இதனிடையே, அந்தக் காணொளியைப் பார்த்த வலைத்தளவாசிகள், மோட்டார் சைக்களுக்கான பாதை தனியாக இருக்கும் நிலையில், கார் செல்லும் டோல் சாவடியைப் பயன்படுத்துவது தவறு என்றும்; இந்தச் செயலுக்கு இது சரியான தண்டனைத்தான் என்றும் கடிந்து வருகின்றனர்.