பெய்ஜிங், பிப்ரவரி 15 – சீனாவில், தந்தை மேல் உள்ள கோபத்தால், ஒரே ஆண்டில், அவருக்கு எதிராக ஒன்பது முறை போலீஸ் புகார் செய்த பத்து வயது சிறுவன் ஒருவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த தந்தை மேல் அவனுக்கு அப்படி என்ன தான் கோபம் என்கிறீர்களா?
பெரிதாக ஒன்றும் இல்லை, தம்மை விட தமது சகோதரி மீது தந்தை அதிகம் அன்பு வைதிருப்பதாக அந்த சிறுவன் எண்ணியதே, அவனது தீரா கோபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் தாம் புறக்கணிக்கப்படுவதாக எண்ணும் போதெல்லாம், அச்சிறுவன் தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள, போலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்று புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆகக் கடைசியாக, கடந்த ஜனவரி 28-ஆம் தேதி, தமக்கு உதவுமாறு கோரி, சீருடை அணிந்திருக்கும் போலீஸ் அதிகாரி அருகில் அமர்ந்து அவன் அழுது புலம்பும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அச்சிறுவன் இதுவரை எத்தனை முறை போலீஸ் புகார் செய்துள்ளான் என்பது அந்த காணொளியில் குறிப்பிடப்படவில்லை.
எனினும், சம்பந்தப்பட்ட சிறுவனின் தாயார், இதுவரை அவன் எட்டு முறை புகார் செய்துள்ளான் என கூறியுள்ளார்.
இவ்வேளையில், அச்சிறுவனுக்கும் அவனது தந்தைக்கும் இடையில், போலீசாரின் தலையீட்டின் கீழ் சமரசம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.