புத்ரா ஜெயா, ஜன 18 – நம்பிக்கை மோசடி, நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் மீதான குற்றச்சாட்டில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டணை, அபராதம் மற்றும் 2 பிரம்படியை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான சையட் சாடிக் சையட் அப்துல் ரஹ்மான் புதிய வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறார். சட்டத்துறையில் பணியாற்றிய முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகமட் டத்தோ முகமட் யூசோப் ஜைனால் அபிடின் மற்றும் மூத்த வழக்கறிஞர் டத்தோ ஹிஷாம் தே போ தேய்க் ஆகியோர் சையட் சாடிக்கின் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன் சையட் சாடிக்கின் வழக்கறிஞர் குழுவுக்கு தலைமையேற்றிருந்த கோபிந்த் சிங் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி அமைச்சரவை மாற்றத்தில் இலக்கவியல் அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து மேல் முறையீடு நீதிமன்றத்திற்கான விசாரணையில் புதிய வழக்கறிஞர்களை சையட் சாடிக் நியமித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி சையட் சாடிக்கிற்கு 7ஆண்டுகள் சிறை, 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் மற்றும் 2 பிரம்படி விதிக்கப்படுவதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.