வட கொரியா, டிச 7 – கடந்த ஓராண்டுக் காலமாக வட கொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, தயவு செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என தாய்மார்களிடம் மன்றாடியுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்.
ஆயிரக்கணக்கான தாய்மார்களுடன் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் கண்ணீர் மல்க இக்கோரிக்கையை வெளிப்படுத்திய கிம் ஜோங் உன் பின்னர் கைக்குட்டையால் கண்ணீர் துடைத்துக் கொண்டது அங்கு வந்திருந்த தாய்மார்களையும் கண் கலங்க வைத்திருக்கிறது.
கிம் ஜோங் உன் அதிபராகிய இந்த 11 ஆண்டுக் காலத்தில் முதல் முறையாக இத்தகைய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
தாய்மார்களுக்கு வீட்டை நிர்வகிப்பதில் உதவுவதும் பிறப்பு விகிதத்தை குறையாமல் இருப்பதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் கடமை என அவர் அம்மாநாட்டில் கூறியுள்ளார். அதே சமயத்தில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கம்யூனிச சித்தாந்தை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.
2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இப்போது வட கொரியாவின் மக்கள் தொகை 25.7 மில்லியனாக இருக்க வேண்டும். ஆனால் அங்கு தற்போது 24 மில்லியன் மக்களே இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.