கோலாலம்பூர், மார்ச் 5 – தலைநகரில், ஒரே நாளில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர், 50 ஆடவர்களால் வழிமறித்து தடவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இதுவரை போலீஸ் புகார் எதையும் பெறவில்லை.
வெளிநாட்டை சேர்ந்த முன்னாள் செய்தியாளர் ஒருவர், தலைநகர், பாசார் செனியிலிருந்து, அருகிலுள்ள தங்கும் விடுதி ஒன்றுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, ஐம்பது உள்நாட்டு ஆடவர்கள் வழிமறித்து தனது மார்பகங்களை தடவ முயன்றதாக, அதிர்ச்சியூட்டும் பதிவு ஒன்றை தமது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதை தொடர்ந்து, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜித் அவ்வாறு கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண், அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறும் அல்லாவுடின் கேட்டுக் கொண்டார்.
அவ்வாறு புகார் செய்யவில்லை என்றால், அப்பெண் வெளியிட்டுள்ள பதிவு அடிப்படை அற்ற ஒரு அவதூறு என்பதோடு, கோலாலம்பூரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என வகைப்படுத்தப்படுமென, அல்லாவுடின் சொன்னார்.
உண்மை என்றால் புகார் அளிக்க முன்வர வேண்டும். இல்லையென்றால், அதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொதமக்களிடையே, வேண்டத்தகாத குழப்பத்தையும், அச்சத்தையுமே எற்படுத்தும்.
முன்னதாக, இந்தியாவில் வெளிநாட்டு பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்செயலுக்கு இலக்கான சம்பவத்தை தொடர்ந்து, கோலாலம்பூரும் வெள்ளை இன பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடம். அங்கு சாலையில் நடந்து செல்லும் பெண் ஒருவர், இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை பாலியல் சேட்டைகளை எதிர்கொள்ள நேரிடும் என, வெளிநாட்டு பெண் ஒருவர் தனது X சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.