அலோர் காஜா, ஜன 7 – மலாக்கா, அலோர் காஜாவில், தலை, கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டு நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் குப்பை தொட்டி அருகே கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அந்த சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது போலிஸ் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு டிசம்பர் 31 தேதி பிற்பகல் 2 மணியளவில் எந்தவொரு ஆடையுமின்றி அந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 20 முதல் 30 வயதுக்குட்பட்ட அப்பெண்ணின் சடலம் மலாக்கா மருத்துவமனையில் சவப் பரிசோதனைக்கு உட்பட்டிருப்பதாகவும், இதுவரை எவ்வித அடையளமும் காணப்படவில்லை என்றும் அலோர் காஜா மாவட்ட போலிஸ் தலைவர் அர்ஷத் அபு தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் அந்தப் பெண்ணின் தலை, கால் மற்றும் கைகள் வெட்டப்பட்டு பின்னர் மீத உடல் கம்போங் ரிமாவ் அருகில் ஜாலான் அலோர் காஜா – தம்பின் சாலையோரத்தில் ஒரு கால்வாயில் வீசப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது சிதைந்த நிலையில் இருந்த வேளையில், அந்த பெண் இறந்து 7 முதல் 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அல்லது காணாமல் போன குடும்ப உறுப்பினரை கொண்டவகள் போலிசை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்