
தாப்பா , ஜூன்-8-கூனோங் பத்து பூத்தே (Gunung Batu Putih) மலையேறும் நடவடிக்கையின்போது வழிதவறியதால் அருகிலுள்ள காட்டில் 14 நாட்கள் தொலைந்து போன பிறகு உயிர் தப்பிய 49 வயதான ஜஸ்லின்டா சலுடினின் (Jaslinda Saludin) குடும்பத்தினர், அவரை சிலாங்கூரில் உள்ள வேறு எந்த மருத்துவமனைக்கும் மாற்றுவதற்கு விண்ணப்பிக்கவில்லை.
மாறாக, தாப்பா மருத்துவமனையில் அளிக்கப்பட்டுவரும் சிகிச்சையில் திருப்தி அடைந்துள்ளனர் என தாப்பா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வான் இம்மி சலிம் (Dr Wan Immi Salim ) தெரிவித்தார்.
அவர் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம் என்ற ஆரம்ப எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், இதுவரை நோயாளி அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இடமாற்ற செயல்முறை குறித்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வான் இம்மி சலிம் சுட்டிக்காட்டினார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அவசரகால மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட பிறகு , ஜூன் 6, ஆம் தேதி மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஜஸ்லின்டா தற்போது சீரான நிலையில் இருப்பதாடு , குணமடைவதில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார்.
நீண்ட காலமாக காட்டில் இருந்ததால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் கணிசமாக அவரது எடையும் 10 கிலோவுக்கும் கூடுதலாக குறைந்துள்ளது.
இப்போது வழக்கம் போல் சாப்பிடவும், பேசவும், தொடர்பு கொள்ளவும் முடிகிறது என்றும், அவருடன் அவரது கணவர், சகோதரி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் டாக்டர் வான் இம்மி தெரிவித்தார்.
இதனிடையே தீயணைப்பு, மீட்புத் துறை, போலீஸ் மற்றும் பூர்வகுடி சமூகம் உட்பட தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ A. சிவனேசன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



