
கோலாலம்பூர், மார்ச்-4-நாட்டிலுள்ள 527 தமிழ்ப் பள்ளிகளுக்கும் புத்துயிரூட்டும் முயற்சியாக, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், ‘Projek AIR’ என்ற 5 ஆண்டு திட்டத்தை பரிந்துரைத்துள்ளார்.
அதில் A என்பது Audit அதாவது தணிக்கை, I என்பது Integration அதாவது ஒருங்கிணைப்பு, R என்பது Rasionalisation அதாவது மறுசீரமைப்பு ஆகிய 3 முக்கியக் கட்டங்களைக் குறிக்கிறது.
தமிழ்ப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், STEM மற்றும் இணைய இணைப்புகளை மேம்படுத்தப்படுத்துவதே இதன் நோக்கம் என, மேலவையில் அவர் பேசினார்.
“மாணவர் சேர்க்கை சரிவால் 130-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் ‘குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளி’ என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமூகத்துடன் ஆலோசித்து, அப்பள்ளிகளை இணைக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ பரிந்துரைக்கப்படுகிறது.”
தமிழ் மொழி, கலாச்சாரம், கல்வி என அனைத்தையும் காப்பாற்றி, தமிழ்ப் பள்ளிகளை நவீனமாகவும் வலுவாகவும் மாற்றுவதே இந்த உத்தேச Projek AIR திட்டத்தின் நோக்கம் என்றார் அவர்.
இது, தமிழ்ப் பள்ளிகளை மூடும் திட்டம் அல்ல…மாறாக, புத்துயிரூட்டும் திட்டமாகும்.
தமிழ்ப் பள்ளிகள் பெயருக்கு நிலைத்திருக்காமல், வலுவோடும், நவீனமாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் நீடிக்க முன்வைக்கப்படும் திட்டமாகும்.
“வெறும் உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, முன்னேற வாய்ப்பில்லாத கட்டுமானங்களை இனியும் நாம் தற்காக்க முடியாது; அதே சமயம், சரியான திட்டமிடல் இல்லாமல் நமது பாரம்பரிய அம்சங்களை அழித்திடவும் முடியாது” என சிவராஜ் சொன்னார்.
பழங்கால பெருமைகளை சொல்லியே கல்வியின் எதிர்காலத்தை வளர்க்க முடியாது; மாறாக, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் தைரியமான திட்டமிடல் வாயிலாகவே அது கட்டமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.



