பேங்காக், நவ 27 – தாய்லாந்தில் நவம்பர் 25-ம் தேதி நடந்த திருமண விழாவில் மணமகன் துப்பாக்கியால் தம்மை தாமே சுட்டுக்கொள்வதற்கு முன்னதாக மணமகள் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் வடகிழக்கு நகோன் ரட்சசிமா மாநிலத்திலுள்ள வாங் நாம் கியோ கிராமத்தில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. தாய்லாந்தை பிரதிநிதித்து பாரலிம்பிக் போட்டிகளில் நீச்சல் மற்றும் துப்பாக்கி சுடும் பிரிவுகளில் கலந்துகொண்ட சதுரோங் சுக்சுக் என்பவர் நவம்பர் 25ஆம் தேதி காலை காஞ்சனா பசுந்துக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன் மூன்று ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இரவில் நடைபெற்ற திருமண விருந்தின்போது தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து சதுரோங் மணமகள் உட்பட நால்வரை முதலில் சுட்டுக் கொன்றுவிட்டு பிறகு தம்மை தமே சுட்டுக்கொண்டு மாண்டார். முன்னாள் துணை ராணுவ படை உறுப்பினரான சதுரோங் கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற 11வது ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதாக தாய்லாந்து ஊடகம் தகவல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.