கோலாலம்பூர், பிப்ரவரி 26 – நெடுஞ்சாலையில் திடீரென போக்குவரத்துக்குள் நுழைந்து கனரக வாகனத்தை இடைமறித்து நிறுத்தச் சொல்லிய Escort போலீசார் ஒருவரின் செயலை நெட்டிசன்கள் சாடியிருக்கின்றனர்.
என்ன தான் அவர் தன் கடமையைச் செய்தாலும், அப்படி திடீரென போக்குவரத்துக்குள் புகுந்து அவ்வாறு செய்வது ஆபத்தானது என அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
பொதுவாகவே பயணத்தின் போது கனகர வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தூரம் தேவையல்லவா என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பரபரப்பான போக்குவரத்தின் போது திடீரென வாகனத்தை நிறுத்தும் செயல் விபத்திலோ அல்லது மரணத்திலோ கூட போய் முடியலாம் என நெட்டிசன்கள் கூறினர்.
வைரலான அக்காணொலி குறித்து விசாரணைத் தொடங்கியிருப்பதை புக்கிட் அமான் போக்குவரத்து அமுலாக்க மற்றும் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ Datuk Mohd Azman Ahmad Sapri உறுதிப்படுத்தினார்.
SOP தர நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறும் என்றார் அவர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவத்தில், திடீரென போக்குவரத்துக்குள் நுழையும் அந்த Escort போலீசார், இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், லாரி என நம்பப்படும் கனரக வாகனத்தையும் நிறுத்தச் சொல்லி கைகளை அசைப்பது காணொலியில் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை முதல் வைரலான அந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கின்றனர்.