குவாலா பெராங், டிசம்பர் 27 – திரங்கானு, குவாலா பெராங்கில், நாகப்பாம்பு தலைவிரித்தாடுவது போல தாம் கண்ட காட்சி பொய்யில்லை என்பதை அறிந்த முதியவர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.
கம்போங் சுங்கை உலாரை சேர்ந்த 67 வயது அப்துல் ஹலிம் மூடா எனும் அம்முதியவர், முதலில் தாம் கண்டது வெறும் நிழல் அல்லது வெறுமனே தமக்கு அப்படி தோன்றுவதாக நினைத்ததாக கூறியுள்ளார்.
எனினும், பின்னர் சந்தேகம் வழுத்ததை அடுத்து, தனது மகனை வீட்டின் அறைகளை சோதனையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்படி சோதனையிடப்பட்ட போது தான், நேற்று மாலை மணி 6.50 வாக்கில், வீட்டின் அறை ஒன்றில், நான்கு மீட்டர் நீளமும், 20 கிலோகிராம் எடையும் கொண்ட கருநாகம் ஒன்று பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி அவர் உடனடியாக, APM – மலேசிய பொது தற்காப்பு படைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மாலை மணி 7.10 வாக்கில், அந்த நாகப்பாம்பு பிடிப்பட்டதை, உலு திரங்கானு மாவட்ட பொது தற்காப்பு படை அதிகாரி கேப்டன் முஹமட் ஜம்ரி அப்துல் ரசாக் உறுதிப்படுத்தினார்.
தற்சமயம், உலு திரங்கானுவிலுள்ள, மலேசிய தற்காப்பு படை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அந்த பாம்பு விரைவில், ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் கொண்டு விடப்படுமெனவும் ஜம்ரி சொன்னார்.