கோலாலம்பூர், ஜனவரி 29 – திறந்த வெளியில் கழிவுகளை எரித்ததால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, வயதான பெண்ணை ஆடவன் ஒருவன் பலமுறை அறைந்தும், குத்தியும் தாக்கும் காணொளி ஒன்று வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.
சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த அந்த காட்சிகள், Reddit சமூக ஊடகத்தில், CHCH5089 எனும் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீல நிற சட்டையும், தொப்பியும் அணிந்திருக்கும் ஆடவன் ஒருவன், 80 வயதான பெண்ணை சரமாரியாக தாக்குகிறான்.
தன்னை தற்காத்துக் கொள்ள முயலும் அப்பெண், உதவி கேட்டு அலறும் காட்சியும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
மலாக்கா, தங்சோங் கிலிங்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படும் வேளை ; அவ்வாடவன் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் அண்டை வீட்டுக்காரன் என கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு ஒரு முறை திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் அவ்வாடவனை, புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட அப்பெண் கண்டித்த போது, அவன் அவரை தாக்கியுள்ளான்.
அவ்விவகாரம் தொடர்பில், இதற்கு முன் பலமுறை அவ்வாடவனுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட போதும் பலனில்லை. ஊராட்சி மன்றம், சுற்றுசூழல் துறை உட்பட போலீசாரிடம் கூட புகார் அளிக்கப்பட்ட போதும், திறந்த வெளியில் எரிப்பதை அவன் நிறுத்துவதாக இல்லை.
அதனால், அவ்வாடவனிடம் நேற்று மாலை மீண்டும் பேச சென்ற அப்பெண் கடுமையாக தாக்கப்பட்டார்.
அச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ள வேளை ; அவனுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டுமென இணையப் பயனர்கள் பலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.