கோலாலம்பூர், நவ 16 – தீபாவளியின்போது இலவச டோல் கட்டணத்திற்கான 30 மில்லியன் ரிங்கிட் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக பொதுப்பணித்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடு முழுவதிலும் நெடுஞ்சாலையில் டோல் கட்டணத்தை உயர்த்துவதில்லை என கடந்த ஆண்டு முடிவு எடுக்கப்பட்டபோது அதற்கான 435 மில்லியன் ரிங்கிட் இழப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை அகற்றுவது என அரசாங்கம் முடிவு செய்தால் பெரிய இழப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதையும் அப்துல் ரஹ்மான் சுட்டிக்காட்டினார். இதனிடையே நெடுஞ்சாலை நிறுவனங்களுடன் டோல் கட்டண விகிதத்தை மீண்டும் மறுசீரமைப்பு செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கம் மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் பேச்சுக்களை பொறுத்தே அமையும் என்பதோடு இது தொடர்பான எந்தவொரு முடிவையும் நிதியமைச்சு அங்கீகரிக்க வேண்டும் என அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.